தமிழ் கடவுளுக்கு பெருமை சேர்த்த மாநாடு
ஆக்கபூர்வமான விவாதங்களுக்குப்
பின்னர் இனிதே முடிவடைந்தது
அனைத்துலக முருக பக்தி மாநாடு செய்திகள்: ச.மி.ஹேமலதா + படங்கள்: எம். ரவி
கோலாலம்பூர் ஆகஸ் 13: தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருடைய கீர்த்தியை பரப்பும் பொருட்டு கடந்த நான்கு நாட்களாக இங்கு நடைபெற்ற 2012 ஆம் ஆண்டுக்கான அனைத்துலக முருகன் பக்தி மாநாடு பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களுடன் இனிதே நிறைவேறியது.
|
தவத்திரு ஸ்வாமிகள் இசை வித்வான்களுக்கு சிறப்பு செய்கிறார் |
திரு முருகன் திருவாக்குப் பீடமும் மலாய பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் பிரிவும் இணைந்து நடத்திய இந்த நான்கு நாள் மாநாட்டில் தமிழ் என்பது இறைவன் மொழி என்ற உறுதிபாட்டுடன் இரண்டாண்டுக்கு ஒருமுறை இந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மாநாட்டில் ஆயிரம் பேராரர்கள் கலந்து கொண்டனர். தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, ருமேனியா, இந்தியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர் உட்பட பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து வெளிநாட்டுப் பேராரர்கள் கலந்து கொண்டது மாநாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இருந்தது.
இந்த மாநாட்டில் முருகனின் பெருமையையும் அவருடைய சிறப்புக்களையும் எடுத்துரைக்கும் வகையில் மொத்தம் 38 ஆய்வுக் கட்டுரைகள் சமைக்கப்பட்டன.
|
கணேஷ்குமாரிடம் மாநாட்டின் சின்னத்தை ஒப்படைக்கிறார் தவத்திரு பாலயோகி ஸ்வாமிகள் |
இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியை அதிகாரபூர்வமாக தொடக்க வைத்த டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேல் ஒவ்வொரு ஆலயத்திலும் சமயக் கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதோடு 50000 ரிக்கிட் நன்கொடையையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாநாட்டில் அருட்பெரும் திருப்பணி சிகரமெனும் விருது மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டத்தோ நடராஜனுக்கு வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற பேட்ரிக் ஹார்ரிகன் இம்மாநாட்டில் முருகன் கையேடு என்ற தலைப்பில் உரையாற்றியது பேராரர்களை வெகுவாகக் கவர்ந்தது. முருகனின் திருப்புகழ், முருக வழிபாடு, முருக நெறி, முருகப் பெருமானின் தனிச் சிறப்பு என அவரின் உரையில் முருகனை வர்ணித்தது, அழகான தமிழில் பேசியது கண்டு பல பேராரர்கள் வியந்தனர்.
இந்துக்கள் முறையாக வழிபாடு
செய்ய வேண்டும்
அனைத்துலக முருக பக்தி மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் மோகன் ஷான் இந்துக்கள் முறையாக வழிபாடு செய்ய வேண்டும். இது போன்ற பக்தி மாநாட்டின் மூலமாக முறையான வழிபாட்டு முறையை கற்றுக் கொள்ள முடியும். இளம் தலைமுறையினர் நம் வழிபாட்டு முறையை நன்கு அறிந்து எதிர்காலத்தில் முறையான வழிபாட்டு முறையில் வழிபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.