முருக பக்தி மாநாட்டில்
கட்டுரைப் படைக்கும் அமெரிக்கர்
மலேசிய நண்பன் (கோலாலம்பூர்) 2012.08.02
தலைநகரில் நடைபெற உள்ள முருகபக்தி மாநாட்டில் அமெரிக்கரான பேட்ரிக் ஹாரிகன் கலந்து கொண்டு ஆன்மீகக் கட்டுரை தாக்கல் செய்ய உள்ளார்.
திருமுருகன் திருவாக்கு பீடமும் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து அனைத்துலக முருக பக்தி மாநாட்டினை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதிவரை மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடத்த உள்ளன.
'இந்த மாநாட்டில் முருகபக்தி தொடர்பான ஆன்மீகக் கட்டுரையை படைக்க இருப்பதாகவும் தமிழில் ஆன்மீக உரை ஆற்றப் போவதாகவும்' பேட்ரிக் தெரிவித்தார்.
தமிழில் சரளமாகப் பேசும் இவர் அமெரிக்க மிச்சிகனில் பிறந்து வளர்ந்தவர்.
தற்போது புளோரிடாவில் வசித்து வருகிறார். 1972 டில் திருகோணமலையில் நடந்த முருக பக்தர்கள் பாதயாத்திரையில் நானும் பங்கேற்றேன். அதன் பிறகே முருக பக்தியை பற்றி அதிகம் அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. இந்துமதக் கோட்பாடுகள் என்னை வெகுவாகக் கவர்ந்தது.
இதன் பயனாக படையப்பனோடு ஐக்கியமாகி விட்டேன்.
1998 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற
உலக முருக ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டதோடு மட்டுமின்றி அந்த மாநாட்டின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டேன்.
உண்மையில் முருக ஆராய்ச்சி மாநாட்டை நடத்த வேண்டும் என்ற பரிந்துரையை நான்தான் முதன் முதலாக வைத்தேன் என்று அவர் கூறினார். மொரீஷியசில் 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது முருக ஆராய்ச்சி மாநாட்டிலும் 2003 ஆம் ஆண்டு கோலாலம்பூர் பத்து மலையில் நடைபெற்ற
3 வது முருக ஆராய்ச்சியிலும் கலந்து கொண்டேன்' என்றார் அவர்.
தலைநகரில் நடைபெறும் முருக பக்தி மாநாட்டில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார் அவர். இம் மாநாட்டின் இறுதி நாளான ஆகஸ்ட் 12 ஆம் தேதி நண்பகல் 12.00 மணிக்கு தமிழ் மொழியில்
முருக பக்தி கையேடு என்று முருக பக்தி பற்றி சொற்பொழிவு ஆற்றுவேன் என்றார் அவர்.